வால்மீகி இராமாயணத்தைத் தழுவிக் கம்ப ராமாயணத்தை எழுதிய கம்பர், தமிழ்ப் பண்பாட்டு இயல்புக்கேற்ப மொழி பெயர்த்திருக்கிறார். அப்படி இருக்கும்பொழுது வாலியை இராமன் மறைந்து நின்று கொன்றது சரியா?
இந்த வினா இன்று நேற்று அல்ல. கம்பன் என்று எழுதினானோ அன்றிலிருந்து இருந்துவருகிறது. இதற்கு அவரவர் விருப்பம்போல்தான் விடை கூற முடியும்.
இது ஏதோ திடீரென்று மறைந்து நின்று அம்பு எய்தான் இராமன் என்று கம்பன் ஏற்றுக்கொள்ளவில்லை. மிகத் தொடக்கத்திலே வாலி வதை பற்றிச் சுக்கிரீவனிடம் கூறும்போது,
'... வேறு நின்று'
'எவ்விடத் துணிந்து அமைந்தது'
என்பதாக 'மறைந்து நின்று அம்பு எய்திடப் போகிறேன்’ என்று இராமன் சொல்கிறான். அது சரியா, தவறா என்பது வேறு வாதம். ஆனால், அதை அப்படியே கம்பன் பாடுகிறான். இராமன் சொன்னான்; அது வாலியைப் பற்றி முழுவதும் அவன் ஏதும் அறியாத காலத்திலேயே எடுத்த முடிவு. பின்னர் வாலியை நன்கு அறிந்த பிற்பாடு, தான் எடுத்த முடிவு சரியோ என்கிற ஐயம் இராமனின் மனத்தில் எழுகிறது. அதற்காகத்தான்,
'வில்லறம் துறந்தேன்'
என்று சொல்கிறான். அதற்குத்தான் வாலியின் மகனை அழைத்து,
'நீ இது பொறுத்தி”
என்று உடைவாளைக் கொடுக்கிறான். வாள் என்பது அரசனுடைய அதிகாரத்தின் சின்னம். ஸிம்பல் ஆப் அதாரிட்டி (symbol of authority) அதிகாரத்தைச் சிறு பையனாகிய வாலியின் மகன் அங்கதனிடம் கொடுக்க வேண்டிய காரணம் என்ன? வாலிக்குத் தான் இழைத்த தவறைப் போக்கிக்கொள்ள வேண்டுமென்று நினைக்கிறான். அதற்கு வேறு வழியாகப் போக்கியிருக்கலாம். வாலிக்கு மீட்டும் உயிரைக் கொடுத்திருக்கலாம். ஆனால், வாலி உயிரைப் பெரிதாகக் கருதவில்லை. 'என் உயிர்க்கு அஞ்சி வந்தேன்' என்று சொல்கிற சுக்கிரீவனைப் போன்றவன் அல்லன் வாலி. உயிரை ஒரு பொருட்டாக நினைக்காததால் திருப்பி அவனுக்கு உயிரைக் கொடுப்பது அர்த்தமற்ற செயல். ஆகையினால், நீ இது பொறுத்தி என அவன் மகனிடம் வாளைக் கொடுக்கிறான். ஆக, இராமன்கூட மறைந்து நின்று அம்பு தொடுத்ததை ஒரு வருத்தத்தோடுதான் ஏற்றுக்கொள்கிறான் என்று நினைப்பது தவறு இல்லை.
- பேராசிரியர் அ.ச.ஞானசம்பந்தம்

0 கருத்துகள்