தென்னாப்பிரிக்காவின் ஜோஹன்னஸ்பர்க் நகரில், அந்நாட்டின் அதிபர் சிரில் ராமபோசாவுடன் பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.
வர்த்தகம், முதலீடு, சுரங்கம், அரிய கனிமங்கள், செயற்கை நுண்ணறிவு, உணவு பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து விரிவாக ஆலோசித்த இருவரும் தெற்குலகின் குரலை உயர்த்துவதற்கு கூட்டாக பணியாற்ற உறுதிபூண்டனர்.
தென்னாப்பிரிக்காவுக்கு மூன்று நாள்கள் அரசு முறைப் பயணமாக கடந்த வெள்ளிக்கிழமை வந்த பிரதமர் மோடி, ஜோஹன்னஸ்பர்க் நகரில் ஜி20 உச்சிமாநாட்டில் பங்கேற்றார். இம்மாநாட்டையொட்டி, தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ராமபோசாவுடன் ஞாயிற்றுக்கிழமை அவர் இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.
பாராட்டும், வரவேற்பும்..: இது தொடா்பாக பிரதமர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘அதிபர் சிரில் ராமபோசா உடனான சந்திப்பு மிகச் சிறப்பாக அமைந்தது. வர்த்தகம், கலாசாரம், முதலீடு, தொழில்நுட்ப பரவலாக்கம், திறன் மேம்பாடு, செயற்கை நுண்ணறிவு, அரிய கனிமங்கள், மக்கள் ரீதியிலான தொடர்புகள் உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது உள்பட இருதரப்பு நல்லுறவின் அனைத்து அம்சங்கள் குறித்தும் விவாதித்தோம். நிகழாண்டு ஜி20 உச்சிமாநாட்டை வெற்றிகரமாக நடத்திய தென்னாப்பிரிக்காவுக்கு பாராட்டுகளைத் தெரிவித்தேன். கடந்த 2023-இல் தில்லி ஜி20 உச்சிமாநாட்டின் முடிவுகளை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லும் தென்னாப்பிரிக்காவின் முயற்சிகள் வரவேற்புக்குரியது’ என்று குறிப்பிட்டார்.
கூட்டாக பணியாற்ற முடிவு: பல்வேறு துறைகளில் பரஸ்பர ஒத்துழைப்பின் முன்னேற்றம் குறித்து இரு தலைவர்களும் திருப்தி தெரிவித்தனர்; தெற்குலகின் குரலை உயர்த்துவதற்கு கூட்டாக பணியாற்றவும் உறுதிபூண்டனர் என்று இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவுக்கு சிவிங்கிப் புலிகளை வழங்கும் திட்டத்துக்காக தென்னாப்பிரிக்காவுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார். 2026-இல் பிரிக்ஸ் கூட்டமைப்பின் இந்தியத் தலைமைக்கு தென்னாப்பிரிக்க அதிபர் ராமபோசா ஆதரவு தெரிவித்தார்.
கலகலப்பான உரையாடல்: பிரதமர் மோடி உடனான சந்திப்பின்போது, ‘ஜி20 மாநாட்டை நடத்துவது மிக கடினமான பணி என்பதை நீங்கள் (மோடி) எங்களிடம் முன்கூட்டியே கூறியிருக்க வேண்டும்; அப்படி கூறியிருந்தால், நாங்கள் தப்பித்து ஓடியிருப்போம்’ என்று அதிபர் ராமபோசா நகைச்சுவையாக குறிப்பிட்டார். ‘இந்தியாவின் ஜி20 தலைமையில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் மிகப் பெரியது; எங்களுடையது சிறிய பணி. இந்தியாவிடம் இருந்து நிறைய கற்றுக்கொண்டோம்’ என்று ராமபோசா கூறியபோது, ‘சிறியதுதான் எப்போதும் அழகு’ என்று பிரதமர் பதிலளித்ததால் கலகலப்பான சூழல் ஏற்பட்டது. ஜி20 உச்சிமாநாடு ஆப்பிரிக்காவில் நடைபெறுவது இதுவே முதல் முறையாகும்.
கடந்த 2014-இல் பிரதமராக பதவியேற்றதில் இருந்து தென்னாப்பிரிக்காவுக்கு மோடி மேற்கொண்ட 4-ஆவது அரசுமுறைப் பயணம் இதுவாகும். கடந்த 2016-இல் இருதரப்பு பயணமாக தென்னாப்பிரிக்கா வந்த அவர், 2018, 2023-இல் பிரிக்ஸ் மாநாடுகளுக்காக வந்தார்.
ஜப்பான் பிரதமருடன் சந்திப்பு
ஜி20 மாநாட்டையொட்டி, ஜப்பான் பிரதமர் சனே தகாய்ச்சியை சந்தித்த பிரதமர் மோடி, இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். புத்தாக்கம், வர்த்தகம், பாதுகாப்பு, திறன் பரிமாற்றம் உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து இருவரும் ஆலோசித்தனர்.
ஜப்பானின் முதல் பெண் பிரதமராக கடந்த அக்டோபரில் சனே தகாய்ச்சி பதவியேற்றார். அவருடனான பிரதமர் மோடியின் முதல் சந்திப்பு இதுவாகும்.
கனடா பிரதமர் மார்க் கார்னி, ஜமைக்கா பிரதமர் ஆண்ட்ரூ ஹோல்னஸ், நெதர்லாந்து பிரதமர் டிக் ஸ்கூஃப், சா்வதேச நிதியத்தின் மேலாண் இயக்குநர் கிறிஸ்டலினா ஜார்ஜிவா உள்ளிட்டோரையும் பிரதமர் சந்தித்துப் பேசினார்.
இந்திய நிறுவனங்கள் 1.3 பில்லியன் டாலர் முதலீடு
ஆப்பிரிக்க பிராந்தியத்தில் இந்தியாவின் மிகப் பெரிய வர்த்தக கூட்டாளியாக தென்னாப்பிரிக்கா உள்ளது. கடந்த 2023-24-இல் இருதரப்பு வர்த்தக மதிப்பு 19.25 பில்லியன் டாலர்களாகும். தென்னாப்பிரிக்காவில் மருந்து தயாரிப்பு, தகவல் தொழில்நுட்பம், வாகனத் தயாரிப்பு, வங்கி, சுரங்கம் உள்பட பல்வேறு துறைகளில் கடந்த 2000 முதல் 2024 வரை இந்திய நிறுவனங்கள் 1.3 பில்லியன் டாலருக்கும் மேல் முதலீடு செய்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி - தினமணி 24-11-2025


0 கருத்துகள்